திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதல்வர்
மக்களவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்துகளை அறிந்து தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது திமுக குழு. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான குழு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. இது திமுகவின் தேர்தல் அறிக்கை மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கையாக அமைந்துள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
இந்தியா முழுவதும் உள்ள மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வட்டியில்லா ரூ.10 லட்சம் கடன், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும், குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும், மாநில முதல்வர்களின் ஆலோசனைப்படி ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள், புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும், நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும், ஒன்றிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், தேர்தல் அறிக்கையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும். பெட்ரோல் விலை ரூ.75ஆக குறைக்கப்படும், டீசல் விலை ரூ.65ஆக குறைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும், 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும். நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும், வட்டியில்லா கடனாக மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் போன்ற பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.