தீப்பெட்டி ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததில் தீ விபத்து
திருச்சி, ஏப்.9 சிவகாசியில் இருந்து தீப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒரிசாவிற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 2.30 மணி அளவில் லாரியானது திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள முக்கன் பாலம் என்ற இடத்தில் செல்லும்போது அங்கு மேம்மபாலம் கட்டுமானப்பணி நடைபெற்று வரும் நிலையில் மேம்பால பணிகள் நடைபெறுவதை கவனிக்காமல் லாரியை ஓட்டிச் சென்றதால் தடுப்புச் சுவற்றில் மோதி கவிழ்ந்தது.
இதில் லாரியில் இந்த தீப்பெட்டிகளில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீ பிடித்து எரிய துவங்கியது. நேரம் செல்லச் செல்ல தீ கொழுந்து விட்டு எறிந்ததால் இது குறித்து துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளர் என இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
காயமடைந்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துவங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தீப்பெட்டி ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.