தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்த இருவர் கைது
திருச்சி, ஏப். 30 திருச்சி மாவட்டம் பேட்டவாய்த்தலை அருகேயுள்ள திருச்செந்துறை மேலத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (56). ஜீயபுரத்தில் உணவகம் நடத்தும் இவர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், காவல்துறையினரை ஏமாற்றவே உணவகம் நடத்துவதாகவும், அதை வைத்து சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதாகவும் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் தீவிர கண்காணிப்பிலும் விசாரணையிலும் ஈடுபட்டனர்.
இதில் முத்துக்குமார் முறைகேடான செயல்களில் ஈடுபடுவது உறுதியானது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் அவரது உணவகத்தில் சோதனை செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், லாட்டரி சீட்டுகள் உள்ளிட்டவை ரகசியமாக விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து முத்துக்குமாரையும் அவருக்கு உதவியாகச் செயல்பட்ட பெரிய கருப்பூரைச் சேந்த பன்னீர்செல்வத்தையும் (29) காவல்துறையினர் கைது செய்தனர். முத்துக்குமார் மீது ஏற்கெனவே ஜீயபுரம் காவல் நிலையத்தில் மட்டும் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.