இயந்திரத்தில் சிக்கி துப்புரவு பணியாளர் படுகாயம்
திருச்சி, ஜூலை 24 திருச்சி மாவட்டம் , துறையூர் நகராட்சியில் பணிபுரியும் சரசு (54) என்ற பெண் தூய்மைப் பணியாளர் குப்பை அரைக்கும் மிஷினில் பணியாற்றிய போது எதிர்பாராவிதமாக வலதுகை மிஷினின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி அப்பெண்ணின் தோள்பட்டை வரை சிக்கி படுகாயம்.
திருச்சி மாவட்டம் துறையூரில் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஒட்டுமொத்தமாக அரைக்கும் இயந்திரம் வெங்கடேசபுரம் செல்லும் வழியில் உள்ளது. இந்நிலையில் இன்று தூய்மை பணிக்கு வந்த நிரந்தர பணியாளரான துறையூரை சேர்ந்த சரசு என்ற 54 வயது பெண்மணி குப்பை அரைக்கும் இயந்திரத்தில் பணி செய்வதற்காக சென்று அந்த இயந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டை துடைத்துக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக இயந்திரம் ஓடத் துவங்கி உள்ளது. இதனால் சரசு வலது கை எந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தோள்பட்டை வரை கை முழுவதும் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சரிந்துள்ளார். உடனடியாக சரசு சகப் பணியாளர்களால் துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு காயமடைந்த சரசு அனுப்பி வைக்கப்பட்டார். குப்பை அரைக்கும் இயந்திரத்தில் தூய்மை பணியாளர் பாதிக்கப்பட்ட சம்பவம் துறையூர் நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.