ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
திருச்சி, ஆக.2 திருச்சி கே கே நகரை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 60.) சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்காக வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த வீட்டு மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி கதிர்வேல் சுமார் 15 நாட்களுக்கு முன்பு துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனிடம் தனது விண்ணப்பத்தை கொடுத்துள்ளார்.
விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட சௌந்தர பாண்டியன் 15 நாட்கள் கழித்து வருமாறு கூறியுள்ளார். அதன் பேரில் கதிர்வேல் 29.7.2024 அன்று துவாக்குடி நகராட்சிக்கு சென்று பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனை சந்தித்து தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு பில் கலெக்டர் சௌந்தரபாண்டியன் ரூ. 50,000 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே உங்களது காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்து தர முடியும் என்றும். காலி மனைக்கான வரியை தனியாக கட்டிவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிர்வேல் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த ஆலோசனையின் பேரில் இன்று (2.8.2024) காலை 11 மணியளவில் துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் சௌந்தரபாண்டியன் (வயது 35) கதிர்வேலுவிடமிருந்து ரூ. 50,000 லஞ்சம் பெற்றபோது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல் பிரசன்னா வெங்கடேஷ் சேவியர் ராணி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனை கையும் களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் அது தொடர்பாக துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பில் கலெக்டர் ரூ. 50,000 வாங்கிய லஞ்சத்தொகை அவருக்கு மட்டுமா அல்லது அத்தொகை யார் யாருக்கு எவ்வளவு பிரித்துக் கொடுக்கிறார் எனவும் விசாரணை நடந்து வருகிறது.