வேளாண் பயிர்களில் விலை முன்னறிவிப்பு- சந்தை அறிதிறன் பயிற்சி
திருச்சி, ஆக.2 திருச்சி மாவட்டம் லால்குடி வட்டார வேளாண்மை துறை அட்மா திட்டத்தில் சிறுமயங்குடி கிராமத்தில் வேளாண் பயிர்களில் விலை முன்னறிவிப்பு மற்றும் சந்தை அறிதிறன் பயிற்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண்மை அலுவலர் அனுராதா பேசுகையில் விவசாயிகள் அறுவடைக்கு பின்பு வேளாண்மை பொருட்கள் சந்தைப்படுத்துதல் சேமிப்பு கிடங்கு பயன்படுத்துதல் மின்னணு சந்தை மற்றும் வேளாண்மை விற்பனை துறை சார்பில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார். வேளாண் விற்பனை மற்றும் வணிகத் திட்ட உதவி வேளாண்மை அலுவலர் சிவசக்தி விவசாயிகளுக்கு தினசரி காய்கறி சந்தை விலை நிர்ணயம் செய்யும் முறைகள், உழவர் சந்தை செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரி செல்வன் அட்மா திட்டத்தில் செயல்படுத்தப்படும் விவசாயிகள் பயிற்சி கண்டுணர்வு சுற்றுலா, செயல் விளக்கம் மற்றும் பாரத பிரதமரின் விவசாயிகள் கௌரவ தொகை பெறுவதற்கான வழிமுறைகள் e KYC செய்தல் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக் நுண்ணீர் பாசன திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தக்கை பூண்டு 50% மானியத்தில் பெற்றுக் கொள்ள கேட்டுக்கொண்டார்.
பயிற்சிக்கான ஏற்பாட்டினை உதவி வேளாண்மை அலுவலர் எடிசன்,அட்மா உழவர் நண்பர் சீனிவாசன், உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழ்மணி ஆகியோர் செய்திருந்தனர்.