திருச்சி மத்திய சிறை முகாமில் இருந்த இலங்கை தமிழர் உயிரிழப்பு!!
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சுமார் 100க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களை இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் விடுவித்து வழக்குகளை வெளியிலிருந்து பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வழக்குகள் முடிவடைந்த நிலையிலும் தொடர்ந்து தாங்கள் சிறைத் தண்டனை அனுபவித்துவருவதாகவும் எனவே தங்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்துவருகின்றனர். இந்நிலையில், முகாம் சிறையில் இருந்த இலங்கைத் தமிழரான முஹம்மது அலி(53) என்பவர் கடந்த சில வருடங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதற்கு முன்பு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டதிலிருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், அவர் புற்றுநோய் பாதிப்பால் இன்று (25.06.2021) உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் 6 பேரை சிறைக்காவலர்கள் திருச்சி அரசு மருத்துவமனை வைக்கப்பட்டிருந்த முகமது அலி உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.