மணப்பாறையில் புதிய தார்சாலை அமைக்கக் கோரி திடீர் மறியல்
திருச்சி, செப். 23 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தவிட்டுப்பட்டி, பொன்நகர், பட்டியான்பட்டி, பழையகாலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு கோவில்பட்டி சாலையில் உள்ள உசிலைஊரணி என்ற இடத்தில் இருந்து செல்லும் தார் சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் தற்போது மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் செய்வோர் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இருசக்க வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டு வந்தது. எனவே இந்த சாலையை புதுப்பித்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மணப்பாறை – கோவில்பட்டி செல்லும் சாலையில் உசிலைஊரணி என்ற இடத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மணப்பாறை போலீசார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலையை புதுப்பிக்க கடந்து ஜுலை மாதமே பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.20 லட்சம் மதிப்பில் சாலையும் ரூ.7 லட்சம் மதிப்பில் பாலம் ஒன்றும் கட்டுவதற்கும் சேர்த்து மொத்தம் ரூ. 27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் பணிகள் துவங்கும் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் மறியல் போராட்டத்தால் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.