குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில் திருதேரோட்டம்
திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா கடந்த அக்டோபர் 3 ம் தேதி.கொடியேற்றத்துடன் தொடங்கி இன்று திருதேரோட்டம் வெது விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் குணசீலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரஸன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
குணசீல ஸ்ரீபிரஸன்ன மஹரிசியின் தவத்திற்காக வேங்கடாஜலபதியாக காட்சியளித்த அற்புதத் தலம். இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் சங்கு சக்கரதாரியாய் திருமார்பில் இலக்குமி துலங்க கையினில் செங்கோல் ஏந்தி நின்ற திருக்கோலத்திலே சேவை சாதிக்கின்றார்.
தன்னை அண்டி வந்து வணங்கும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை எல்லாம் நல்கி அருளாட்சி புரிந்து வருகிறார். திருப்பதி சென்று தங்களது
பிரார்த்தனைகளை இயலாதவர்களும் செலுத்த இந்த கோயிலில் செலுத்தி பலன் பெறுகிறார்கள். எனவே, இக்கோயில் தென் திருப்பதி எனப்படுகிறது.
குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டோர் 48 நாள் விரதமுறைப்படி வணங்கினால் அவர்களது வினைகளை சுவாமி போக்கி அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம்.
இக்கோயிலில் திருவிழாக்களில் நடைபெறும் சிறப்புக்குரிய பிரம்மோத்ஸவ விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து பங்கேறு பிரசன்ன வேங்கடாஜலபதியை வழிபடுவர்.
இந்த ஆண்டுக்கான பிரம்மோத்ஸவ விழாவானது கடந்த (புரட்டாசி 17) அக்டோபர் 03 ம் தேதி காலை 7 மணிக்கு பகவத் பிரார்த்தனை, புண்யாக வாசனம், ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர்04 ம் தேதி வெள்ளிக்கிழமை (புரட்டாசி 18) காலை 7 மணியளவில் புண்யாஹவாசனம், 8 மணியளவில் பேரீதாடனம், அதனைத்தொடர்ந்து திக்பந்தனம் பின் 10 மணிக்கு த்வஜா ரோஹணம் என சிறப்பு பூஜைகளோடு செய்து கொடியேற்றப்பட்டு கொடிமரத்தில் தீபாரதனை நடைபெறுகிறது.
இதையடுத்து அன்று இரவு அன்ன வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து அக் 5 ஆம் தேதி இரவு சிம்ம வாகனத்தில், 6 ஆம் தேதி ஹனுமந்த வாகனத்தில் வீதியுலா, 07 ஆம் தேதி கருடச் சேவை, 08 ஆம் தேதி சேஷ வாகனம், 09 ஆம் தேதி யானை வாகனத்தில் சுவாமி வலம் வரும் நிகழ்வும் நடைபெற்று நேற்று முன்தினம் அக்டோபர் 10 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. மேலும் 8 ஆம் திருவிழாவான அக் 11 ஆம் தேதி காலை 7 மணிக்கு செல்வர் புறப்பாடு, பல்லக்கு புறப்பாடு நடைபெறுகிறது. சுவாமி வெண்ணெய் தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9 ஆம் திருவிழாவான திரு தேரோட்டம் இன்று நடைபெற்றது.
முன்னதாக காலை 5 மணிக்கு புண்யாஹவாசனம், திருவாராதனம் நடைபெற்றது. தொடர்ந்து 8.45 மணியளவில் பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் உபய நாச்சியாருடன் திரு தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள் உபற நாச்சியார்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டடு விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியானது 9.15 மணியளவில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து கோவிந்தா.. கோவிந்தா.. என முழக்கத்தோடு இழுத்து கோயிலை சுற்றி வந்தனர். இதில் சுமார் 1 மணிநேரம் சுற்றி வந்த திருதேர் 10.15 மணியளவில் நிலையை அடைந்தது.
மேலும் திருத்தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை நிர்வாக டிரஸ்டி கே.ஆர். பிச்சுமணி, கோயில் பணியாளர்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்கின்றனர்.