மணப்பாறையில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீர்
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் மழை நீரானது மோர்குளம் சென்று அங்கிருந்து வாய்க்கால் வழியாக மாமுண்டி ஆற்றுக்குச் செல்கிறது. இந்நிலையில் மோர்க்குளத்தில் இருந்து மாமுண்டி ஆற்றுக்குச் செல்லும் ஒருபகுதி வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் குளத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் நகராட்சியின் 5 வது வார்டு பகுதியில் உள்ள தர்மலிங்கம் தெரு, கீரைத்தோட்டம் பகுதியைச் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால் அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவதாகவும், பாம்பு பள்ளி, பூரான், தேள் போன்ற விஷ பூச்சிகள் வீட்டுக்குள் படையெடுப்பதால் வீட்டில் குடி இருக்கவே அச்சமாக உள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டும் மக்கள் உடனடியாக தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றிடக்கோரி தேங்கியுள்ள தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை வட்டாட்சியர் செல்வம், நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், வாய்க்கால் குறித்து நில அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அதனை அகற்றி வாய்க்காலை சீரமைத்து தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பொதுமக்கள் தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.