திருச்சி மாநகராட்சி 38–வது வார்டு கவுன்சிலர் அடாவடி பேச்சு : இந்திய மாணவர் சங்கம் கண்டனம்
திருச்சி, அக். 18 திருச்சி மாநகராட்சி 38 வது வார்டு கவுன்சிலர் தாஜீதீன் அடாவடி பேச்சு, இந்திய மாணவர் சங்கம் கண்டனம்
திருச்சி காட்டூர் பகுதியில் அமைந்துள்ள உருமு தனலட்சுமி கல்லூரி ஆதிதிராவிடர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் பாதையுடன் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பாலம் ஆறு மாத காலமாக உடைந்து விபத்து அடிக்கடி நடந்து வந்தது.
இந்நிலையில் இதனை கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலைத்துறை மாநகராட்சி கவுன்சிலர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் போராட்டம் நடத்துவதாக அறிவித்த நிலையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார், இதனிடையே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பு தருவதாக கூறி அதன் அடிப்படையில் பணியினை தொடங்கினார்கள்.
அப்போது அந்த இடத்திற்கு வந்த 38 வது வார்டு கவுன்சிலர் தாஜீதீன் பணி செய்பவர்களிடம் என்ன பிரச்சனை என கேட்டார் அதற்கு அவர்கள் இந்த பள்ளத்தினால் விபத்துகள் ஏற்படுவதாக கூறி மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர் என கூறியதற்கு 38 வது வார்டு கவுன்சிலர் விபத்து ஏற்பட்டால் அதற்கு என்ன செய்வது நடந்தால் நடக்கட்டும் என்று அடாவடியாக பேசியதாக கூறப்படுகிறது.
மக்கள் பணி செய்வதற்காக மாமன்ற உறுப்பினர்களாக போட்டியிட்டு மக்களிடம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற பிறகு அவர்களை அலட்சியப் படுத்துவது அவர்களுக்கு என்ன ஆனாலும் கவலை இல்லை என்ற அடிப்படையில் செயல் படுவதனை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் மாமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.