திருச்சியில் கடந்த 6 நாட்களில் 77 ரவுடிகள் உள்பட 152 பேர் கைது
திருச்சி மாநகரில் ரவுடிகள் கொட்டத்தை அடக்க, கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் உள்ள ரவுடிகள், தலைமறைவாக உள்ள ரவுடிகள், பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் ரவுடிகள் போன்றவர்களை கைது செய்ய மாநகர போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த 6 நாட்களாக ரவுடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சரித்திர குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்று, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த ரவுடிகளையும் தேடினார்கள்.
இதன் பலனாக ரமேஷ், விஜய பாபு, நவநீதகிருஷ்ணன் , விமல், இருளாண்டி, யுவராஜ், லியோ, ரெனால்ட், ராகேஷ், வின்சி உள்ளிட்ட 73 ரவுடிகள் கடந்த 5 நாட்களில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். நேற்று மேலும் 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் சரித்திர பட்டியலில் ஈடுபட்ட பிற குற்றவாளிகள் 75 பேரும் சிக்கினர்.
கடந்த 6️ நாட்களில் மட்டும் 77 ரவுடிகள் உள்பட மொத்தம் 152 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிற ரவுடிகளையும் கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள ரவுடிகள் ஜாமினில் வெளி வராமல் இருக்க அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.