எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை எதிர்ப்பு
திருச்சி, ஜன.13 திருச்சி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள சிறுவணிக கடைகளை அகற்ற வேண்டுமென்று சட்டமன்றத்தில் பேசிய கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேச்சு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்டத் தலைவர் எஸ்.பி. பாபு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மலைக்கோட்டையில் லிஃப்ட் (LIFT) அமைப்பது குறித்து சட்டசபையில் பேசியுள்ளார். இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அதே வேளையில் அவர் திருச்சி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறியது, அங்கு சுற்றியுள்ள தரைக்கடை சிறு வணிகர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
மலைக்கோட்டைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள வணிக வளாகங்களில் பல கோடி ரூபாய் வரி வாடகை பணங்கள் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இது குறித்தும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கார்ப்பரேட் கடைகள் அனைத்தும் விதிமீறல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும் எம்.எல்.ஏ பேசியிருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும்.
ஏழை எளிய நடுத்தர அடித்தட்டு மக்கள் வாழ்க்கை தரத்தோடு ஒன்றியுள்ள சிறு வணிகர்கள் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள வணிகத்தினால் பயன் பெறுகின்றனர். இந்த சிறுவணிகத்தை முறையாக ஒழுங்குப்படுத்தி, சிறு வணிகர்களையும் அப்புறப்படுத்தாமல் இருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
என்.எஸ்.பி சாலையில் கார் போன்ற பெரிய வாகனங்களை இயக்காமல், வயதானவர்களுக்கான ட்ராலி கார்கள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை மட்டுமே அனுமதித்தால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாது. பெரிய வணிகர்களுக்காக, சிறு வணிகர்களை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் எந்த நபராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம் என்றார்.