‘ஹிந்தி’ பெயர்களை அழிப்பதை தடுக்க தீவிர ரோந்து
திருச்சி, பிப். 25 மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி வழங்கப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரசாத் அண்மையில் கூறினார். இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் ஹிந்திக்கு எதிரான போராட்டம் எழுந்துள்ளது. ஒன்றிய அரசின் ஹிந்தி திணிப்புக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் ரயில் நிலையங்கள், ஒன்றிய அரசின் அலுவலகங்களில் ஹிந்தி எழுத்து அழிக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரயில் நிலையங்களில் ஹிந்தியில் உள்ள பெயரை சிதைப்பதற்கு எதிரான சிறப்பு கண்காணிப்பு இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தெற்கு முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், ரயில்வே ஜிஎம் ஈஸ்வர ராவ், உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையர்பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் K. P. செபாஸ்டியன் தலைமையில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அங்கத்தினர் திருச்சி நடைமேடைகளில் ஹிந்தியில் உள்ள ரயில்வே பெயர் பலகைகளை சிதைப்பதற்கு எதிராக சிறப்பு இயக்கம் நடத்தப்பட்டது.
மேற்படி பாதுகாப்பின் போது திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை நாய்ப் பிரிவுடன் நடைமேடை பகுதியில் ரோந்து சென்று பயணிகளின் சாமான்கள் மற்றும் பார்சல்களை சோதனை செய்தனர். மேலும் இந்தியில் உள்ள பெயர் பலகைகளை சிதைக்கும் சம்பவங்களைத் தடுக்க நுழைவுச் சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.