தமிழக போலீஸ் டி.ஜி.பி. கடந்த 23-ந் தேதி முதல் இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணி வரை ரவுடிகளை பிடிப்பதற்கான தீவிரவேட்டை நடத்த அறிவுறுத்தி இருந்தார். இது தொடர்பாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.மூர்த்தி மேற்பார்வையில், அனைத்து காவல் அதிகாரிகளும், போலீசாரும் கடந்த 2 நாட்களாக ரவுடிகளை பிடிக்கும் தீவிரவேட்டையில் ஈடுபட்டனர். இதில், 150 ரவுடிகளை பிடித்து, அவர்களிடம் ஆயுதங்கள் ஏதும் உள்ளதா ? கூட்டாளிகள் யாரேனும் உடன் உள்ளனாரா ? என விசாரித்தனர்.
மேலும் காட்டுப்புத்தூர் காவல் நிலைய சரித்திர குற்றப்பதிவேடு குற்றவாளியான சீலைப்பிள்ளையார் புதூர் கிராமத்தை சேர்ந்த குமார் என்ற சிவக்குமார் (வயது 48) என்பவரை கைது செய்து வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவ்வேட்டையில், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லை பகுதியான கோப்பு கிராமம் மாரியம்மன் கோவில் அருகில் குற்றசம்பவங்களில் ஈடுபடும் நோக்கத்தோடு சட்டவிரோதமாக கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் திரிந்த சரித்திர பதிவேடு ரவுடி கோபி என்பவரின் கூட்டாளிகளான கோப்பு கீழத்தெருவை சேர்ந்த பார்த்தசாரதி பாபு (26), மனோஜ் குமார் (24), அருண் குமார் (24), கோகேஷ் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றி சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.