சொந்த செலவில் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வந்த ஆசிரியர்கள்
திருச்சி, ஜூன் 3 மணப்பாறை அருகே பேருந்து வசதி இல்லாததால் சொந்த செலவில் புதிதாக சேர்ந்த மாணவ – மாணவிகளை ஆசிரியர்கள் பள்ளிக்கு அழைத்து வந்து இனிப்பு வழங்கினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கஸ்பா பொய்கைப்பட்டியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கோடை விடுமுறை முடித்து நேற்று பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டது. பின்தங்கிய கிராமத்தில் பள்ளி இருப்பதால் பேருந்து வசதி இல்லாத நிலையில் இந்த பள்ளிக்கு மாணவ- மாணவிகளின் சேர்க்கை குறைந்தே காணப்பட்டு வருகின்றது. ஆனாலும் பொதுத் தேர்வுகளில் இந்த பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு பேருந்து வசதி இல்லாத நிலையில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களே தங்களின் சொந்த செலவில் மாணவ- மாணவிகளை வேன் மூலம் அழைத்து வந்தனர்.
இதே போல் பள்ளிக்கு புதிதாக வந்த மாணவ -மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். பேருந்து வசதி ஏற்படுத்தி தரும் வரை ஆசிரியர்கள் தங்களின் சொந்த பணத்தில் வேன் ஏற்பாடு செய்துள்ள நிலையில் அரசு விரைந்து பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.