தடுப்பணையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
திருச்சி, ஜூன் 4 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கத்திக்காரன்பட்டியை சேர்ந்த சந்தனம் மகன் ஜோதிமணி(27). இவர் சென்னையில் பேக்கரி ஒன்றியில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த ஜோதிமணி, தனது நண்பர்களான கருப்பன் மகன் ரமேஷ்(23) மற்றும் சுப்பிரமணி மகன் செல்லமுத்து(24) ஆகியோருடன் கண்ணுடையான்பட்டியில் உள்ள மாமுண்டி ஆற்றுவாரியில் மாலை குளிக்க சென்றுள்ளனர். மூவரும் தடுப்பணையில் தேங்கி நின்ற தன்ணீரில் குளித்து கொண்டிருந்தபோது, ஜோதிமணி மட்டும் நீரில் மூழ்கியுள்ளார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற மணப்பாறை தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கி இருந்த ஜோதிமணியை சடலமாக மீட்டெடுத்தனர். மணப்பாறை காவல் ஆய்வாளர் சீனிபாபு தலைமையிலான போலீஸார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞர் உயிரிழப்பு குறித்து மணப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.