பாம்பாலம்மன் கோவில் திருவிழாவை நடத்திக் கோரி கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதம்
திருச்சி, ஜூன் 7 மணப்பாறை அருகே திருவிழாவை நடத்திக் கோரி கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் காவல்துறை, வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தே.துலுக்கம்பட்டியில் புகழ்பெற்ற பாம்பாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று காப்பு கட்டி திருவிழா தொடங்க இருந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் தனக்கும் பூஜை செய்வதில் உரிமை உள்ளதாக கூறியதால் பிரச்சனை ஏற்படவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கிராம மக்கள் மற்றும் மற்றொரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் எந்தவித சுமூகமுடிவும் எட்டப்படாத நிலையில் கோவில் மூடப்பட்டது.
இதனால் வேதனை அடைந்த கிராம மக்கள் இன்று கோவில் திருவிழா காப்பு கட்ட வேண்டிய சூழலில் திருவிழா நடத்த முடியாத நிலை இருப்பதை அறிந்து திருவிழா நடத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில் அருகே தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வையம்பட்டி போலீசார் மற்றும் வருவாய்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.