2026 இல் மட்டுமல்ல 2031லும் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்பதால் நீதிமன்றத்தை நாடுகிறார்கள் : அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

0 135
Stalin trichy visit

திருச்சி, ஆக.7  2026 இல் மட்டுமல்ல 2031லும் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்பதால் அதிமுகவினர் நீதிமன்றத்தை நாடுகிறார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி அளித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நாளையொட்டி டி.வி.எஸ். டோல்கேட்டிலுள்ள அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்  அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வியே ஆயுதம் கழகமே கேடயம் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்து தந்த பாதையில் தற்போதைய முதல்வர் வழிகாட்டல் படி பாசிச சக்திகளுக்கு என்றும் எதற்கும் பணியாமல் கருப்பு சிவப்பு என்கிற திமுக வின் கொள்கை கொடியை உயர்த்தி பிடித்து உறுதி ஏற்கின்ற நாளாகவும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்க உறுதி ஏற்கும் நாளாகவும் இந்த நாள் அமைந்திருக்கிறது.

தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைத்துள்ளது. இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வரும் காலத்தில் உலகத்திற்கே முன்மாதிரியாக இருக்கக் கூடிய மாநிலமாக தமிழகம் மாறும்.

மக்கள் நலத்திட்டத்திற்கு பெயர் முக்கியமா அல்லது அதனால் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மை முக்கியமா என்பதை அறியாமல் எதற்கெடுத்தாலும் வழக்கு தொடுக்க வேண்டும் என மக்கள் பயன்பெறக்கூடிய உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளால் 2026 இல் மட்டுமல்ல 2031 லும் திமுக ஆட்சியை பிடித்து விடும் என்கிற அச்சத்தில் நீதிமன்றத்தை நாடினார்கள். ஆனால் நீதிமன்றம், அரசியலுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது எனக் கூறி வழக்கு தொடுத்தவருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மக்களுக்காக சிந்திக்க கூடியவர்கள் ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள். மக்கள் எப்படி போனால் என்ன அவர்களுக்கான திட்டத்தை நிறுத்த வேண்டும் என நினைப்பவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள்.

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியில் மாநகராட்சி சார்பில் செயல்படுத்த இருந்த கோழி இறைச்சி கழிவுகள் மூலம் மீன் தீவனம் தயாரிக்கும் திட்டம் நல்ல திட்டம் தான். ஆனால் அந்த திட்டத்தை மக்கள் பகுதியில் அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர் இந்த நிலையில் அரியமங்கலம் பகுதியில் செயல்பட இருந்த அந்த திட்டம் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

எஸ்.எஸ்.ஐ நேற்று கொலை செய்யப்பட்டார். குடும்ப பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அங்கு சென்ற போலீஸ் அதிகாரி அங்கு நடந்த தகராறில் கொல்லப்பட்டுள்ளார் இது தொடர்பாக விசாரணை நடைபெற்ற வருகிறது முழுமையாக தெரியாமல் அது பற்றி நான் கருத்து கூற முடியாது. என்கவுண்டர் தான் தீர்வா என கேட்டபோது என்கவுண்டர் நடந்திருப்பது எனக்கு தெரியாது என்றார். செய்திகளை பார்த்த பின் அது பற்றி கருத்து சொல்கிறேன் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.