மழையில் நனைந்த நெல்மணிகளால் விவசாயிகள் கவலை
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம், வைரிசெட்டிப்பாளையம், கோட்டப்பாளையம், விஸ்வாம்பாள்சமுத்திரம், பி.மேட்டூர், புளியஞ்சோலை, தங்கநகர், பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. உப்பிலியபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாம் பருவ குறுவை நெல் அறுவடை முழு வீச்சில் உள்ளதால், இப்பகுதியில் பெய்துள்ள கனமழையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அறுவடைக்கு தயாராக உள்ள நேரத்தில் பெய்துள்ள மழையால், வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் அறுவடையை பாதிப்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர். அறுவடையை முடித்து அரசு நெல் கொள்முதல் மையங்களில் கொட்டிவைக்கப்பட்டுள்ள நெல் குவியல்கள் தண்ணீரில் மிதக்கின்றன. மாவட்ட நிர்வாகம் அரசு நெல் கொள்முதல் மையங்களின் இயக்கங்களில் கூடுதல் கவனம் செலுத்த விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.