தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொடூர கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்
திருச்சி, அக். 2 திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் களிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (வயது 46 ) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 15 ஆண்டுகளாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து நாகமங்கலத்தில் தனியாக வசித்து வந்தார். பின்னர் அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். இரவு கடை வராண்டா மற்றும் அங்குள்ள நாடக மேடை போன்ற இடங்களில் படுத்து உறங்கி விடுவார்.
நேற்று இரவு கீழ நாகமங்கலம் அருகே உள்ள விழுதடி கருப்பு கோவில் அருகாமையில் உள்ள நாடக மேடையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த துரையின் தலையில் பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டுள்ளனர்.
இதில் நொடி பொழுதில் அவர் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
துரைக்கு குடிப்பழக்கம் உள்ளது. ஆகவே மது போதை ஆசாமிகளுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதத்தில் அவரை கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது.
கொலை செய்யப்பட்ட பகுதியில் கள்ள மார்க்கெட்டில் மதுபானம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இது பற்றி அக்கம் பக்கத்தினர் மணிகண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் கூடுதல் துணை போலீஸ் பனவத் அரவிந்த் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொழிலாளி தலை மீது கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.