உப்பிலியபுரம் அருகே கோவிலில் அம்மன்தாலி, உண்டியல் பணம் கொள்ளை
திருச்சி, நவ.6 திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட எரகுடி ஊராட்சி வடக்கிப்பட்டி கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோவிலில் அம்மன்தாலி, உண்டியல் பணம் கொள்ளை.
பாப்பாத்தி அம்மன் கோவிலில் பூசாரி கணேசன் (55), திங்கட்கிழமை இரவு 7.00 மணிக்கு வழக்கம்போல் விளக்கு ஏற்றி கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் (செவ்வாய் கிழமை) மாலை 7.00 மணியளவில் கோவிலை திறக்க வந்தபோது, முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பாப்பாத்தி அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 1½ பவுன் தங்கத் தாலி, ஒரு வெள்ளி குடம், மற்றும் கடந்த ஐந்து வருடங்களாக திறக்கப்படாத உண்டியல் பணம் (50,000 )காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக கோவில் பூசாரி கணேசன் அளித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.