முசிறி அரசு ஆண்கள் பள்ளியில் நூற்றாண்டு விழா நடத்த அமைச்சரிடம் கோரிக்கை
திருச்சி, நவ.24 முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா நடத்துவதற்கு உரிய தேதி நிர்ணயிக்க வலியுறுத்தி முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட்டு நூறு ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு நூற்றாண்டு விழா நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் மாணவர்கள் மற்றும் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் ஆகியோருடன் கலந்தாய்வுக் கூட்டங்களும் நடைபெற்றது. நூற்றாண்டு விழா நடத்துவதற்கு முன்னாள் மாணவர்கள் நிதி அளித்து வருகிறனர்.
இந்நிலையில் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் பாலசேகர், தர்மராஜ்,காமராஜ். கலைச்செல்வன் ஆகியோர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர். அதில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடத்த வேண்டும். அதற்காக பல்வேறு திட்டமிடல்களைத் தொடர்ந்து 10.10.2025 அன்று விழா நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் விழா நிகழ்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. எனவே அமைச்சர் நூற்றாண்டு விழா நடத்துவதற்கு உரிய நாள் மற்றும் நேரத்தை நிர்ணயித்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் விழா நடத்தி விடலாம் என தெரிவித்துள்ளளார்.
இதனால் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.