பள்ளி மாணவி இறந்த விபத்து வழக்கில் சாட்சி அளிக்காத பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
திருச்சி முசிறி அருகே உள்ள சின்னவேலகான நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் தேஜாஸ்ரீ (வயது 7). இவர் முசிறி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி அன்று வீட்டில் இருந்து வேனில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது முசிறி காமாட்சிபட்டி ரோடு அருகே சென்றபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்தது. இதில் தேஜாஸ்ரீ பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். தற்போது இந்த வழக்கு திருச்சி முதலாவது சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை இதையடுத்து நீதிபதி வேதியப்பன் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ராவுக்கு சாட்சி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். தற்போது அவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.