சமயபுரம், ஸ்ரீரங்கத்தில் துர்கா ஸ்டாலின் தரிசனம்; பாதையாத்திரையாக நடந்து வந்தார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு உள்ளவர். தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். இந்நிலையில் புரட்டாசி மாத அமாவாசை தினமான நேற்று அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் சமயபுரம் வந்தார்.

முன்னதாக, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் கைகாட்டியில் இருந்து காரிலிருந்து இறங்கி சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக நடந்து மாரியம்மன் கோவிலுக்கு இரவு 7.20 மணிக்கு வந்தார்.
தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. அப்போது துர்கா ஸ்டாலின் மாரியம்மனை பயபக்தியுடன் வணங்கினார். அம்மனை தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் முதல்வர் மனைவி வந்திருந்ததை அறிந்து கைகளை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து கொடி மரத்தை வணங்கிய அவர் பின்னர் காரில் ஏறி திருச்சிக்கு சென்றார். துர்கா ஸ்டாலினுடன் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பெண்கள் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இதையடுத்து இன்று காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார்.