இ.பைலிங் முறையை திரும்ப பெறக் கோரி கணினி-யை உடைத்து வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, டிச.17 இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி இன்று திருச்சி நீதிமன்ற வாயிலில் கணிப்பொறியை உடைத்து திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என கூறி வழக்கறிஞர்கள் இ-பைலிங் முறையை வாபஸ் பெற கோரி கடந்த 1 – ந் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .
அந்த வகையில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் செயல்படாத பழைய கணிப்பொறியை கீழே போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பி.கணேசன் தலைமை தாங்கினார். திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் சி. முத்துமாரி முன்னிலை வகித்தார். இதில் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.