குளத்தின் கரையை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்கள் : விவசாயிகள் பாதிப்பு

0 364
Stalin trichy visit

திருச்சி, டிச.22  மணப்பாறை அருகே குளத்தின் கரையை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.

திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகே முத்தப்புடையான்பட்டியில் திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே நல்லதண்ணீர்க்குளம் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த குளத்தின் கரையருகே உள்ள கிணற்று தண்ணீரைத்தான் அப்பகுதி பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் இப்பகுதியைச் சேர்ந்த ராஜாளிகவுண்டம்பட்டி, கலிங்கபட்டி, நடுப்பட்டி, அடைக்கலம்பட்டி மற்றும் முத்தப்புடையான்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது வேளாண்நிலங்களுக்கு நல்லதண்ணீர் குளத்தைத்தாண்டி செல்ல வேண்டும் என்பதால் இக்குளத்தின் கரை வழியாக சென்று வந்தனர். சுமார் 45 அடி அகலம் உள்ள இந்த குளக்கரையில் வேளாண் பொருட்களை வண்டிகளில் ஏற்றி வருவதும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதும் வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஜேசிபி மூலம் குளத்தின் கரையை இரண்டு இடங்களில் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் தண்ணீர் பாசனத்திற்குச் செல்லும் குழுமி அருகில் வெட்டப்பட்டுள்ளதால் குழுமி மற்றும் வாய்க்கால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. உடைக்கப்பட்ட கரை வழியாக விவசாயிகள் செல்லவும் வாகனங்களில் வேளாண் பொருட்களை எடுத்துச் செல்லவும் முடியாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மேலும் குளத்தில் தண்ணீர் தேக்கிவைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே கரையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு உடைக்கப்பட்ட குளத்தின் கரையை சரி செய்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.