மணப்பாறை அருகே குழாய் உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது
திருச்சி, ஜன.12 மணப்பாறை அருகே காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கலிங்பட்டி அருகே மருங்காபுரிக்கு குடிநீர் வழங்கப்படும் பெரிய அளவிலான காவிரி குடிநீர் குழாய் உள்ளது. மிகவும் சேதமடைந்து காணப்படும் இந்த குழாயில் அவ்வபோது உடைப்பு ஏற்பட்டு காவிரி குடிநீர் வீணாக செல்லும் நிலையில் நேற்று மாலை குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி தூரத்திற்கு மேல் காவிரி நீர் பீறிட்டு வெளியேறி ஆற்றில் வீணாக சென்றது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் குடிநீர் வழங்கல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் அதிக திறன் கொண்ட மின்மோட்டார் நிறுத்தப்பட்டதை அடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் குடிநீர் வீணாவது நிறுத்தப்பட்டது. இருப்பினும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சென்றது மக்களை வேதனையடையச் செய்தது.