தனியார் சுற்றுலா பேருந்து தீப்பற்றி எரிந்து சேதம்
திருச்சி, பிப்.9 திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே அகிலாண்டபுரம் வள்ளலார் நகர் பகுதியில் கார். பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு எலக்ட்ரிக்கல் வேலை மற்றும் டிஸ்கோ லைட், ஆடியோ சிஸ்டம் பொருத்தும் ஓர்க் ஷாப் இயங்கி வருகிறது.இந்த ஒர்க் ஷாப்பில் நேற்று தனியார் சுற்றுலா பேருந்துக்கு ஊழியர்கள் ஆடியோ சிஸ்டம் மற்றும் டிஸ்கோ லைட் பொருத்தும் பணியில் மும்முர மாக ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு பேருந்தில் தீ பற்றியது. இந்த தீ உடனே மளமளவென பேருந்து முழுவதும் பரவி தீ கொழுந்து விட்டு எரியத் துவங்கியது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க போராடினர். இருப்பினும் தீ மளமளவென பற்றி பேருந்து முழுவதும் பரவியது.இதனால் அப்பகுதியில் பெரும் புகை மூட்டமாக காணப்பட்டது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் மற்றும் லால்குடி தீயணைப்பு துறையிறருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பேருந்து எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகள் தீ விபத்தில் இருந்து தப்பியது. இந்த தீவிபத்தில் கடை உரிமையாளர் விக்கி என்பவருக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டது. அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவம்னைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார், அப்பாத்துரை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார் வையிட்டனர். இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.