மும்முடி சோழமங்கலம் கிராமத்தில் காய்கறி விதை தொகுப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு
திருச்சி பிப்.12 மும்முடி சோழமங்கலம் கிராமத்தில் காய்கறி விதை தொகுப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு – விவசாயிகளுக்கு இலவச காய்கறி விதைகள் வழங்கல்.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், மும்முடி சோழமங்கலம் கிராமத்தில், தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன மாணவர்கள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக அப்பகுதி விவசாயிகளுக்காக காய்கறி சாகுபடி முறைகள் மற்றும் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இலவச காய்கறி விதை தொகுப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில், காய்கறி பயிர்களின் முக்கியத்துவம், சமநிலையான உணவிற்கான காய்கறிகளின் பங்கு, குறைந்த செலவில் அதிக மகசூல் பெறும் சாகுபடி முறைகள், வீட்டு தோட்டம் அமைப்பது, இயற்கை உரங்களின் பயன்பாடு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் போன்ற பல்வேறு பயனுள்ள தகவல்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன. மேலும், அரசு வழங்கும் தோட்டக்கலை மானிய திட்டங்கள் குறித்தும், சிறு மற்றும் குறுநில விவசாயிகள் பயன்பெறக்கூடிய உதவித் திட்டங்கள் குறித்தும் மாணவர்கள் விளக்கினர்.
இதனைத் தொடர்ந்து, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் சார்பாக விவசாயிகளுக்கு இலவச காய்கறி விதை தொகுப்புகள் வழங்கப்பட்டன. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததுடன், எதிர்வரும் பருவத்தில் காய்கறி சாகுபடியில் அதிக ஈடுபாடு காட்டுவதாக தெரிவித்தனர்.
இந்த விழிப்புணர்வு மற்றும் இலவச காய்கறி விதை வழங்கும் திட்டத்தை தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன மாணவர்களான அகமது இஸ்மாயில்.அ, அன்புசெல்வன்.நீ, அர்ச்சுதன்.பி, அருண்குமார்.அ, பாலாஜி.செ, தனுஷ் ராஜ்.ச, தாரணி.தா, தருண்.தி, பிரான்சிஸ் சாவியர்.எ, கோகுல்.ஏ ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தினர்.
இந்நிகழ்வுக்கு செல்வி ரா. பிரியங்கா, உதவி பேராசிரியர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை விரிவாக்கத்துறை; திரு மு. அப்துல் ரஹ்மான், உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர், தாவர மரபியல் மற்றும் இனப் பெருக்கத் துறை; சு. சுகுணா, உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர், பயிர் நோயியல் துறை ஆகியோர் வழிகாட்டுதல் வழங்கினர். அவர்களின் மேற்பார்வை மற்றும் ஆலோசனையின் பேரில் மாணவர்கள் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, வேளாண் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்டனர்.
இந்த முயற்சி, கிராமப்புற விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கும் முக்கிய பங்காற்றும் என அப்பகுதி மக்கள் பாராட்டினர்.