சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
திருச்சி, மார்ச் 11 மணப்பாறை அருகே சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சடையம்பட்டியில் இருந்து குமாரவாடி செல்லும் சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான நிலையில் இருந்து வருகின்றது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட மிகுந்த சிரமமாக உள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள களத்துப்பட்டி, ராஜிவ்நகர், செல்லநாயக்கனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியதுடன் இதுசம்மந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை வசதி கேட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.