தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, மே 22 திருச்சியில் தனியார் பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு முகாம் – பாதுகாப்பு அம்சங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாம் இன்று நம்பர் 1 டோல்கேட் அருகே கூத்தூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி கிழக்கு, மேற்கு, மணப்பாறை, முசிறி, லால்குடி மற்றும் Srirangam உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 168 தனியார் பள்ளிகளில் இயங்கி வரும் வேன் மற்றும் பேருந்துகள் இந்த ஆய்வில் பங்கேற்றன. இதில் சுமார் 152 பள்ளிகளைச் சேர்ந்த 1061 வாகனங்கள் இயங்கி வரும் நிலையில், இன்று நடைபெற்ற முகாமில் 805 வாகனங்கள் ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த ஆய்வினை திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் சாதனம், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதையும், பிரேக், எமர்ஜென்சி டோர், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, சீட் பெல்ட் உள்ளிட்ட 16 வகையான பாதுகாப்பு அம்சங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது சில பள்ளி வாகனங்களில் அவசரகால மருத்துவ பெட்டகம் இல்லாததும், ஓட்டுநர் இருக்கை அருகே பாதுகாப்பு கம்பிகள் அமைக்கப்படாததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவற்றை சரிசெய்ய மாவட்ட ஆட்சியர் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், 21 பள்ளிகளைச் சேர்ந்த 256 வாகனங்கள் தகுதிச்சான்றிதழ் (FC) புதுப்பிக்காமல் இயக்கப்பட்டு வந்தது ஆய்வில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களுக்கு சான்றிதழ்களை உடனடியாக புதுப்பிக்க காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தனியார் பள்ளி மாணவர்களை ஆட்டோக்களில் அதிக அளவில் ஏற்றி வரும் ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து Tamil Nadu Fire and Rescue Services சார்பில் தீயணைப்பு வீரர்கள், பள்ளி வாகனங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிக்க வேண்டும், தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஓட்டுநர்களுக்கு செய்முறை விளக்கமளித்தனர்.
ஆய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.