தா.பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் : முசிறி எம்.எல்.ஏ ஆய்வு
திருச்சி, ஜுன் 9 முசிறி அருகே தா.பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து முசிறி தொகுதி விக்னேஷ் எம்.எல்.ஏ ஆய்வு.
திருச்சி மாவட்டம், முசிறி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்தார். அப்போது ஒன்றிய ஆணையர்கள் செந்தில்குமார், ரவிசந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய அலுவலர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எம்எல்ஏ விக்னேஷ் கேட்டறிந்தார். மேலும் சாலைவசதி, குடிநீர்வசதி, தெருவிளக்கு, பள்ளி மாணவர்களுக்கான கட்டிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டிய பணிகள் பற்றி ஆலோசனை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு குடிநீர், சுகாதாரம் மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் உரிய முறையில் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். வளர்ச்சி பணிகள் அனைத்தும் தரமாக செய்து கொடுக்க வேண்டும் என்றும் எம்எல்ஏ விக்னேஷ் அறிவுறுத்தினார். தவெக வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
பின்னர் முசிறி அருகே சேருகுடி ஊராட்சியில் செயல்படும் தனியார் கோழிப் பண்ணைகளினால் ஈக்களின் தொந்தரவு அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து கோழிபண்ணைக்கு நேரில் சென்ற எம்எல்ஏ விக்னேஷ் கோழிப்பண்ணைகளை சுற்றி பார்த்து ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களிடம் ஈக்களின் தொந்தரவு குறித்து ஆலோசனை மேற்கொண்டதுடன், கோழிப் பண்ணைகளை சட்ட விதிகளுக்கு உட்பட்டு பராமரிக்குமாறும், ஈக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்யுமாறு அறிவுறுத்தினார்.