ஸ்ரீரங்கம் கோவில் விடுதி பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மோசடி : வடமாநில இளைஞர் கைது
திருச்சி, ஜூன் 27 ஸ்ரீரங்கம் கோவில் விடுதி பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மோசடி : வடமாநில இளைஞர் கைது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் கொள்ளிடம் கரையில் “யாத்ரி நிவாஸ்” என்ற பெயரில் தங்கும் விடுதி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவில் தங்கும் விடுதியின் பெயரில் போலி இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் பக்தர்களுக்கு முன்பதிவு செய்து கொடுத்து மோசடி செய்யப்படுவதாக திருச்சி மாநகர சைபர்கிரைம் போலீசாருக்கு புகார் வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலி இணையதளம் மோசடியில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் காமன் அருகே உள்ள பிலாங்க கிராமத்தை சேர்ந்த ஜாபர் (வயது 23) என தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இணையதள குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.