தரமற்ற சீருடை : மணப்பாறை தனியார் பள்ளி முன்பு வழக்கறிஞர் போராட்டம்
திருச்சி, ஜூன் 29 மணப்பாறையில் தரமற்ற சீருடை வழங்கப்படுவதாக கூறி தனியார் பள்ளி முன்பு வழக்கறிஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சேதுரத்தினம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். வழக்கறிஞரான இவரது மகள் மணப்பாறைபட்டியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் ஒவ்வொரு வருடமும் சீருடை மாற்றப்படுவதாகவும், அந்த சீருடை மிகவும் தரமற்ற முறையில் இருப்பதாகவும், வாங்கும் பணத்திற்கு தகுந்த தரத்தில் சீருடை வழங்காததால் தான் வருடத்திற்கு ஒரு முறை மாற்றும் நிலை இருப்பதாக கூறி மகளுக்கு வழங்கப்பட்ட சீருடையுடன் பள்ளி நுழைவாயில் முன் அமர்ந்து நேற்று தர்ணாவில் ஈடுபட்டார். இதற்கு உரிய தீர்வு தீர்வு காண வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மணப்பாறை போலீசார் மற்றும் பள்ளி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து வழக்கறிஞர் தர்ணாவை கைவிட்டார்.
தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிமுன் வழக்கறிஞர் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.