இடையபட்டி ஊராட்சி கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த 18 கிராம மக்கள்
திருச்சி, ஆக.15 மணப்பாறை அருகே இடையபட்டி ஊராட்சி கிராமசபை கூட்டத்தை 18 கிராம பொதுமக்கள் புறக்கணிப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் ஊராட்சியை இரண்டாக பிரித்து புத்தாநத்தம் மற்றும் இடையபட்டி ஊராட்சி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புத்தாநத்தம் ஊராட்சியானது கிராம பகுதிகளில் விவசாயமும் புத்தாநத்தம் நகரத்தில் ஆயத்த ஆடை மற்றும் டெக்ஸ்டைல்ஸ் உற்பத்திகள் அதிகமாக இருக்கக்கூடிய இரண்டும் கலந்த ஒரு பகுதி இதை தனித்தனியாக பிரித்தால் பொருளாதார ரீதியாக இரண்டு தொழிலும் முழுமையாக பாதிக்கப்படும். ஊராட்சியை பிரிக்கும் பொழுது பொருளாதார ரீதியாக ஒரு பக்கம் வளர்ச்சியும் மற்றொரு பக்கம் வீழ்ச்சியடையும் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி புத்தாநத்தம் ஊராட்சியை இரண்டாக பிரிக்கப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து புத்தாநத்தம் ஊராட்சியைச் சேர்ந்த கிராமப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் புத்தாநத்தம் ஊராட்சியை இரண்டாக பிரித்து புதிதாக இடையபட்டி ஊராட்சி உருவாக்கப்பட்டது. 18 கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியின் முதல் சுதந்திரதினவிழா கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது. புதிய ஊராட்சியின் முதல் கிராம சபைக் கூட்டத்தைத் அனைத்து கிராமத்தினரும் புறக்கணிப்பதாக அந்த ஊராட்சியைச் சேர்ந்த இடையபட்டி, புங்குருணிபட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கணவாய்பட்டி, குருமலைப்பட்டி, சரளபட்டி, கம்புளியம்பட்டி, அண்ணாநகர், சின்னாகவுண்டம்பட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட 18 கிராமமக்களும் இடையபட்டியில் பேனர் வைத்தனர். ஆனால் கிராம சபை கூட்டத்திற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அதில் கிராமமக்கள் கலந்து கொள்ளாத நிலையில் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் இந்த ஊராட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் என போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இன்னைக்கு இருக்கிற அரசாங்கம் ஒருதலைபட்சமான ஒரு அரசாங்கமா இருக்கிறதத்தான் நாங்கள் உணர்கிறோம். ஏன்னா கடையடைப்பு போராட்டம் நடத்தி இருக்கோம் உண்ணா ஒரு போராட்டம் நடத்தி இருக்கிறோம். தொடர்ந்து கலெக்டர் ஆபீஸ்ல போய் போராட்டம் பண்ணி இருக்கோம். பிடிஓ ஆபீஸ்ல கருத்து கேட்பு கூட நடத்தியுள்ளனர். அதையும் மீறி மக்களுடைய உணர்வுகளை மதிப்பு கொடுக்காத வகையில இந்த இந்த நிகழ்வானது நடந்திருக்கு. தயவு கூர்ந்து இப்ப இருக்கக்கூடிய அரசாங்கம் இப்ப இருக்கக்கூடிய எம்எல்ஏ எங்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றனர்.