செப்.1 முதல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்துச்செல்ல தடை
திருச்சி, ஆக. 21 செப்.1 முதல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குள் பக்தர்கள்
செல்போன் எடுத்துச்செல்ல தடை இணை ஆணையர் சூரியநாராயணன் அறிவிப்பு
சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் சூரிய நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவின்படி வருகிற செப்டம்பர் 1-ந் தேதி முதல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல் போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. பக்தர்கள் எடுத்து வரும் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கு மாரியம்மன் கோவிலில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பக்தர்கள் வரிசை வளாகங்கள் தெற்குரதவீதி, மேற்குரதவீதி ஆகிய நான்கு இடங்களிலும் பக்தர்கள் செல்போன்களை வைத்துக்கொள்ள பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. பக்தர்கள் எடுத்து வரும் செல்போன்களை அந்த மையங்களில் ரூ.5 கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்று பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். அம்மனை தரிசனம் செய்த பின் டோக்கனை காண்பித்து செல்போன்களை வாங்கிச் செல்லலாம். இந்த உத்தரவினை மீறி பக்தர்கள் மறைமுகமாக செல்போன்களை- கோவிலுக்குள் எடுத்துச்செல்வது தெரியவந்தால் செல்போன்களை பறிமுதல் செய்வதுடன் காவல்துறை மூலம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.