திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருச்சி மாநகரம், அரியமங்கலம் ரவுடி குலாம் தஸ்தகிர்(வயது 32) கடந்த ஆண்டு நிர்வாக செயல்துறை நடுவர் கோர்டில் ஆஜராகி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை வழங்கினார்.
இதையடுத்து ரவுடி குலாம் தஸ்தகிர் நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி வழிப்பறி மற்றும் பொது சொத்திற்கு பங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால் அரியமங்கலம் போலீசார் கடந்த 19-ந் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் திருச்சி மாநகரில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.