திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது ஜி.கே.வாசன் கூறுகையில், கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலம், மாணவர்களின் கல்வி என்பது நாட்டின் வளர்ச்சி. எனவே இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு அரசியல் சாயம் பூச தேவையில்லை.
தமிழ்நாடு தினம் குறித்து தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள், தமிழ் ஆர்வலர் மற்றும் அரசியல் கட்சியினர் ஒத்த கருத்து இல்லாமல் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். எனவே தமிழ்நாடு அரசு அனைவரின் ஒத்த கருத்தை கேட்டு முடிவு எடுக்க வேண்டும்.

பண்டிகை காலமாக இருப்பதாலும், கொரோனா, டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவல் இருப்பதாலும் நாளை டாஸ்மாக் திறப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பார்கள் திறப்பது அரசின் லாபத்திற்கு தானே தவிர மக்களின் நல்வாழ்வுக்கு இல்லை. காவிரி பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
அப்படியே தொடர வேண்டும் என்பது த.மா.க. நிலைபாடு. இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னை பெட்ரோகெமிக்கல் இணைந்து ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பில் 90 லட்சம் டன் சுத்திகரிப்பு திறன் நிலையத்தை நிறுவிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு சிறு, குறு தொழில் முதலீடு சார்பில் ஒப்பந்த புள்ளிகளை கோரியிருப்பதை மீண்டும் திரும்பப்பெற வேண்டும்.
சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தொடர வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். அதனால் அ.தி.மு.க.வின் உள்விவரங்கள் குறித்து பேசுவது சரியாக இருக்காது என்றார்.