திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி வடக்கு தெருவில் இருக்கும் வனத்தாயி அம்மன் கோவில் பகுதியில் உள்ள காட்டில் வீடு கட்டி குடி இருந்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் கோபி(வயது 29). இவர் அப்பகுதியில் மீன் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். இந்நிலையில் அவரது தற்கொலை சம்பந்தமாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும் கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?, கடன் பிரச்சனையா? அல்லது குடும்ப பிரச்சினையா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். போலீசுக்கு தெரியாமல் பிணத்தை அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.