குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள நெய்வேலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அன்பழகன் மகன் கோபிநாத் (வயது 15). இவர் தண்டலிபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை தினம் என்பதால் கோபியும் அதே பகுதியை சேர்ந்த அவனது நண்பர்கள் சிலரும் ஊர் அருகில் உள்ள அம்மாயி குளத்தில் லாரி டியூபின் உதவியுடன் குளித்துக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் சென்றதும் சக நண்பர்கள் கோபிநாத்தை பார்த்தபோது அவன் காணவில்லை. இதனையடுத்து கோபிநாத் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது. இதுகுறித்து வாத்தலை போலீசார் மற்றும் முசிறி மீட்புப்பணி குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் மீட்புப்பணி குழுவினர் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேர தேடுதல் பணிக்கு பிறகு கோபிநாத் உடல் சடலமாக மீட்கப்பட்டது. உடனடியாக வாத்தலை போலீசார் கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.