திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் நேற்று அதிகாலை ஆடு திருடி சென்ற கும்பலை பிடிக்க முயன்றபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்து கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரண நிதி உதவியும், குடும்பத்திற்கு அரசு வேலையும் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று திருச்சி திருவெறும்பூர் சோழமாபுரம் பகுதியில் உள்ள எஸ்.ஐ. பூமிநாதன் வீட்டிற்கு சென்ற நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறினார். அப்போது மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என் சேகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.