சென்னை முடிச்சூர் பீர்கங்கரணை பகுதியில் ஒரு வீட்டில் ரூ.65 ஆயிரம், 50 கிராம் தங்க நகை, வௌ்ளி பொருட்களை கொள்ளையடித்த பலே திருடன் ஒருவன், சென்னை ஏர்போர்ட்டுல் நின்றிருந்த காரையும் திருடிக்கொண்டு திருச்சி நோக்கி தப்பி சென்றுள்ளார். இதனை அறிந்த சென்னை போலீசார் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் பெரம்பலூர் போலீசாரை தொடர்பு கொண்டு அந்த காரை நிறுத்தி திருடனை பிடிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் பிடிக்க முடியவில்லை.
இறுதியில் சென்னை போலீசார், திருச்சி போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் கூறி உள்ளனர். திருச்சியில் திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை, சஞ்சீவி நகர், பால்பண்ணை, செந்தண்ணீர்புரம், டி.வி.எஸ். டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டி புதுார் பிரிவு ரோடு, பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் போலீசார் தடுப்பு (பேரிகார்டு) அமைத்து காரை வழிமறித்து பிடிக்க தயாராக நின்றிருந்தனர். ஆனால் திருடனோ, பேரிகார்டுகளை தெறிக்க விட்டு மின்னல் வேகத்தில் காரை ஓட்டி சென்றுள்ளார்.

பின்னாலேயே நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகனங்களும் துரத்தி சென்றது. இதனை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து மேற்கொண்டு நின்று கொண்டிருக்கும் போலீசாருக்கு மைக் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பஞ்சப்பூரில் பேரிகார்டுடன் நின்றிருந்த போலீசார் உஷாரடைந்து பேரிகார்டுக்களுக்கு பதிலாக சாலைக்கு குறுக்கே கார்களையும், இருசக்கர வாகனங்களையும் நிறுத்தி மேற்கொண்டு செல்லமுடியாமல் தடுப்பு ஏற்படுத்தினர்.
இதனை கவனித்த பலே திருடன், இதற்கு மேல் செல்ல முடியாது என்பதை அறிந்து காரை சாரநாதன் கல்லுாரி அருகே திருப்ப முயற்சித்தான். ஆனால், பின்னால் துரத்தி வந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார், காரை திருப்ப முடியாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
இதனால் காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த முள்ளு காட்டுக்குள் இறங்கி தப்பி ஓடினார். அவரை பிடித்து எடமலைப்பட்டிபுதுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். விசாரணையில் அவரது பெயர் வினோத்குமார்(வயது19) என்பதும், அவர் தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தொிய வந்தது. இது குறித்து சென்னை போலீசாருடன் திருச்சி போலீசார் கலந்து பேசி வருகின்றனர்.