திருச்சியில் 3ஆம் நாளாக நடைபெற்ற காவலர்கள் உடற் தகுதி தேர்வு
திருச்சி, ஆக. 23 திருச்சியில் 3 ஆவது நாளாக நடைபெற்ற காவலர்கள் தேர்வில் 365 பேர் நீளம் தாண்டுதல், ஓட்டம், கயிறு ஏறுதல் உள்ளிட்டவைகளில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2 ஆம் நிலை காவலர்கள், தீயணைப்புத்துறை, சிறைத்துறை உள்ளிட்டவைகளில் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற் தகுதிதேர்வு திருச்சி, சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதியிலிருந்து நடந்து வருகிறது. இதில் மொத்தம் 998 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற 782 பேரில், சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உயரம் மற்றும் மார்பளவு சரிபார்த்தல், சகிப்புத்தன்மை சோதனை உள்ளிட்டவைகள் மூலம் 369 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின்னர் அவர்கள் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 365 பேர் மட்டுமே பங்கேற்றனர் 4 பேர் பங்கேற்கவில்லை.
இந்த தேர்வில் மேற்பார்வை அலுவலராக திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி, துணை ஆணையர் எஸ். செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.