கோவை, மதுரை மெட்ரோ ரயிலுக்கு அனுமதி மறுப்பு- ஒன்றிய அரசின் பாரபட்ச நடவடிக்கை : அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு

0 177
Stalin trichy visit

திருச்சி, நவ.19  கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் பணிகளுக்கு அனுமதி இல்லை என ஒன்றிய அரசு கூறியுள்ளது தமிழ்நாட்டின் மீது பாரபட்சமாக நடந்து கொள்வதையே காட்டுகிறது – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி கலையரங்கத்தில் இன்று, 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்களான ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் தன்னிறைவிற்கான கருவிகளாகக் கூட்டுறவுச் சங்கங்கள் ” திகழவேண்டும் என்ற இலக்குடன், சுற்றுலா, சுகாதாரம், பசுமை எரிசக்தி, கூட்டுறவு உருவாக்கும் தளங்கள், சமையலறை கூட்டுறவுகள் மற்றும் பிற சாத்தியமான துறைகள் போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில் கூட்டுறவுகளை விரிவுபடுத்துதல் போன்ற பணிகளுக்காக, மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டுக்கேடயங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், கூட்டுறவு சங்கங்களே இல்லாத நிறுவனங்கள் இல்லை என்கிற நிலை கலைஞர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வாங்குபர்களுக்கு 7 சதவீதம் வட்டி இருந்தது அது படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று சரியாக கடன் செலுத்தும் விவசாயிகளின் வட்டியை அரசே ஏற்கும் நிலை உள்ளது. விவசாயிகளுக்கு உதவக்கூடியது கூட்டுறவு சங்கங்கள் தான். கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு ரூ.7500 கோடியை கலைஞர் தள்ளுபடி செய்தார். அதை பார்த்து அன்று நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் இந்தியா முழுவதும் ரூ.80 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவு சங்கங்கள் மக்களின் பணத்திற்கும் முழு பாதுகாப்பு வழங்குகிறது. தமிழ்நாட்டிலகூ 40,000 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கக்கூடிய முறைகேடுகள் மீது அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில்வே பணியை தொடங்குவதற்கு தமிழக அரசு கேட்ட அனுமதியை தர ஒன்றிய அரசு மறுத்துவிட்டது. 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என்கிற காரணம் கூறுகிறார்கள் ஆனால் வெளி மாநிலங்களுக்கு அனுமதி வழங்குகிறது. தமிழ்நாட்டிற்கு அனுமதி தராதது ஒன்றிய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்பதையே இது காட்டுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் ரெயில்வே பால பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் தாமதமாகவே ரெயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. இது தவிர காவேரி பாலப்பணிகள் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் உயர்மட்ட பாலப்பணிகளை தொடங்கினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அந்த பணிகள் முடிந்த பின் உயர்மட்ட பால பணிகள் தொடங்கப்படும்.

கூட்டுறவு சங்கங்களுக்கான உறுப்பினர் சேர்ப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்த பின் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தமிழக முதல்வர் அறிவிப்பார் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.