சமயபுரம் கோவிலில் பக்தர்கள் வரிசை வளாகம் : முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
திருச்சி, மே 10 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.13.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகத்தை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். சமயபுரம் கோவில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு பக்தர்கள் வரிசை வளாக கட்டடத்தை பார்வையிட்டார். உடன் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் செல்வராஜ், கல்யாணி, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.