மணப்பாறையில் தேமுதிக உறுப்பினர் சேர்த்தல் முகாம்
திருச்சி, ஏப்.22 மணப்பாறையில் நடைபெற்ற தேமுதிக உறுப்பினர் சேர்த்தல் முகாமில் 400 க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தேமுதிகவில் உறுப்பினராக இணைந்தனர்.
தமிழகம் முழுவதும் தேமுதிக தீவிர உறுப்பினர் சேர்த்தல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகர, ஒன்றிய தேமுதிகவின் சார்பில் உறுப்பினர் சேர்த்தல் முகாம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
மாநில விவசாய அணி துணைச் செயலாளர் தொப்பம்பட்டி சரவணன் தலைமையில் நடைபெற்ற முகாமில் கேப்டன் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான பாரதிதாசன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்தும் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இம்முகாமில் ஒரே நாளில் 400 க்கும் மேற்பட்டோர் தேமுதிகவில் இணைந்தனர்.
இதில் மாவட்ட அவைத்தலைவர் அர்ஜூணன், மாவட்ட பொருளாளர் வசந்த் பெரியசாமி, செயற்குழு உறுப்பினர் முல்லை சந்திரசேகர், நகர செயலாளர் கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், சிங்காரவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முகாமிலேயே கணினி மூலம் பதிவுசெய்யப்பட்டு உடனடியாக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுனர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் முகாமிற்கு வந்து தேமுதிக உறுப்பினர்களாக இணைந்தனர்.