மணப்பாறையில் தே.மு.தி.க. கொடிக்கம்பங்களை அகற்றிய நகராட்சி நிர்வாகம்
திருச்சி, ஜூலை 26 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேமுதிக சார்பில் மின் கட்டண உயர்வு, ரேஷன் கடையில் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக சாலைகளில் உள்ள தடுப்பு சுவரில் தேமுதிக கட்சி கொடிக்கம்பங்கள் வைத்திருந்தனர். ஆடிக் காற்றின் வேகம் காரணமாக தேமுதிக கொடிக்கம்பங்கள் சாலையில் விழுந்தது. இதனால் சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனை அறிந்த மணப்பாறை நகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் தேமுதிக கொடி கம்பங்கள் அகற்றும் பணியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டதோடு நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன. தேமுதிக கொடிக்கம்பங்களை நகராட்சி நிர்வாகம் அகற்றிய சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.