மருங்காபுரியில் தி.மு.க. அலுவலகங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்
திருச்சி, டிச. 19 திருச்சி மாவட்டம், மருங்காபுரி பகுதியில் நகர, ஒன்றிய திமுக கட்சி அலுவலகங்கள் திறப்பு விழா நடைபெற்றது. துவரங்குறிச்சியில் பொன்னம்பட்டி நகர கழக அலுவலகம், மருங்காபுரி வடக்கு ஒன்றிய அலுவலகத்தை வளநாடு கைகாட்டியிலும், மத்திய ஒன்றிய அலுவலகத்தை கருமலையிலும், தெற்கு ஒன்றிய அலுவலகத்தை எம்.இடையபட்டியிலும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் அங்கிருந்த பெரியார், அண்ணா, கலைஞர் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார். நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, திமுக தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், பொருளாளர் குணசேகரன், துவரங்குறிச்சி நகர செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், பழனியாண்டி, சின்னடைக்கன், பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் சரண்யா, துணைச்செயலாளர் ராஜாமுகமது உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.