சிறுமி விழுங்கிய நாணயத்தை நவீன முறையில் அகற்றிய டாக்டர்கள்
திருச்சி, ஆக. 23 – திருச்சி அருகே முசிறியில் சிறுமி ஒருவர் தவறுதலாக விழுங்கிய நாணயத்தை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நவீன முறையில் அகற்றினர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, தவறுதலாக ஒரு நாணயத்தை விழுங்கி விட்டார். அவர் நெஞ்சு வலியுடன் மூச்சு விட சிரமப்பட்டதையடுத்து உறவினர்கள் முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அனுப்பி வைத்தனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில், வயிறு மற்றும் குடல் சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் கண்ணன் தலைமையில் மருத்துவர்கள் ராஜசேகனர், சங்கர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிறுமியின் வயிற்று பகுதியில் இருந்த நவீன ( சாதனங்களைக்கொண்டு) சிகிச்சை மூலம் நாணயத்தை அகற்றினர்.